அமராவதி: ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக குறைந்த பாதிப்பானது கடந்த செவ்வாயன்று பதிவானது. அன்று 33 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் அங்கு 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 10 மணியோடு முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், இவர்களில் 7 பேர் சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்குச் சென்று வந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டூரில் மட்டும் 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களில் 3 பேர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குச் சென்று வந்தவர்களாக இருக்கிறார்கள். இதேபோல கிழக்கு கோதாவரியில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஆந்திரத்தில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,137 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 948 ஆகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய கரோனா அபாயப் பகுதியாக மாறிய கோயம்பேடு சந்தை மூலமாக ஆந்திர மாநிலத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.