கரோனாவால் சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் குறைந்தன
கரோனா தொற்று பாதிப்பால் பொருளாதாரம், தொழில் மட்டுமல்ல, இந்திய அளவில் சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் குறைந்துள்ளன.
கரோனா தொற்று பாதிப்பால் பொருளாதாரம், தொழில் மட்டுமல்ல இந்திய அளவில் சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் வெகுவாகக் குறைந்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் சரிகா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). வயது 27. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த மாதம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று மருத்துவரை அணுகிய போது, அவரோ, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு பதிலாக, செவிலியர் ஒருவரின் உதவியோடு வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஏன் என்றால், அந்த மருத்துவரின் மருத்துவமனை கரோனா பாதிப்புக்காக மூடப்பட்டிருந்தது. மருத்துவமனைக்குச் செல்வதால் கரேனா தொற்று பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் அவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
உடனடியாக நாங்களும் ஒரு ஓய்வு பெற்ற செவிலியரின் உதவியோடு வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொண்டேன் என்கிறார் சரிகா. ஏப்ரல் 29ம் தேதி சுகப்பிரசவத்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் சரிகா.
இவருக்கு அதிர்ஷ்டம் இருந்ததால், சுகப்பிரசவத்தில் நல்லபடியாகக் குழந்தை பிறந்துள்ளது. இதுபோல மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் எத்தனையோ பெண்கள் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். அதில் பலருக்கும் பிரசவ கால பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். பலர் மரணம் அடைந்தும் இருக்கலாம்.
கடந்த ஏப்ரல் மாதத்துப் புள்ளி விவரங்கள் தெரிய வராததால், மார்ச் மாதத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது மத்திய சுகாதாரத் துறை பராமரித்து வரும் தகவலின் அடிப்படையில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் 43 சதசீதம் குறைந்துள்ளது.
அதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 17,17,500 பிரசவங்கள் நடந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 9,71,782 பிரசவங்கள் மட்டுமே நடந்துள்ளன.
இதுபோலவே சிசேரியன் அறுவை சிகிச்சையிலும் மிகப்பெரிய சரிவு காணப்படுகிறது. பிரசவங்களில் 5 - 15 சதவீதம் சிசேரியனாகவே உள்ளது. இதுவும் கடந்த மார்ச் மாதம் 46 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த மார்ச் மாதம் மருத்துவமனைகளில் நடந்த பிரசவங்கள் இந்த அளவுக்குக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.