10 ரூபாய் தாளை முகக்கவசமாக மாற்றிய இளைஞர்: எச்சரித்து அனுப்பிய காவலர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காவலர்களிடம் இருந்து தப்பிக்க கையில் வைத்திருந்த 10 ரூபாய் தாளை எடுத்து முகக்கவசம் போல ஒட்டிக் கொண்ட இளைஞருக்கு இரண்டு முகக்கவசங்களை அளித்த காவல்துறையினர், பொதுவிடங்களில் முகக்கவசம் இல்லாமல் சுற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காவலர்களிடம் இருந்து தப்பிக்க கையில் வைத்திருந்த 10 ரூபாய் தாளை எடுத்து முகக்கவசம் போல ஒட்டிக் கொண்ட இளைஞருக்கு இரண்டு முகக்கவசங்களை அளித்த காவல்துறையினர், பொதுவிடங்களில் முகக்கவசம் இல்லாமல் சுற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.
மீரட்டில் இரண்டு சக்கர வாகனத்தில் தனது நண்பன் மெஹ்பூபாவுடன் சென்று கொண்டிருந்தார் இளைஞர் அமீர். அப்போது சாலையோரம் காவல்துறையினர் நின்று கொண்டு வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
இருவருமே முகக்கவசம் அணியாததால் காவலர்களிடம் சிக்கிக் கொள்வோமோ என்று பயந்தனர். நண்பர் மெஹ்பூபா, தான் வைத்திருந்த கைக்குட்டையை முகத்தில் கட்டிக் கொள்ள, கைக்குட்டையும் இல்லாத அமீர், பாக்கெட்டில் இருந்து 10 ரூபாய் தாளை எடுத்து முகக்கவசம் போல ஒட்டிக் கொண்டார்.
அவரிடம் காவலர்கள் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டதற்கு, ஒரு முகக்கவசத்தின் விலை ரூ.40. என்னிடம் 10 ரூபாய் தான் உள்ளது. எனவே அதையே முகக்கவசமாக மாற்றிக் கொண்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
இது பற்றி காவல்துறை அதிகாரி சஞ்சீவ் தேஷ்வால் கூறுகையில், முகக்கவசம் இல்லாத இளைஞர்களை மடக்கிய போது, ஒருவர் 10 ரூபாய் தாளை முகக்கவசம் போல ஒட்டிக் கொண்டார். கேட்டதற்கு, முகக்கவசம் வாங்க பணமில்லை என்று கூறினார். உடனே அவருக்கு இரண்டு முகக்கவசம் வழங்கி, இவ்வாறு பொதுவிடத்தில் முகக்கவசம் இல்லாமல் சுற்றக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினோம் என்று தெரிவித்துள்ளார்.