கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு தோல்வி: ராகுல் காந்தி
இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தோல்வி அடைந்தது தெளிவாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புது தில்லி: இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தோல்வி அடைந்தது தெளிவாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காணொலி காட்சி வாயிலாக ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது ஊரடங்கை தளர்த்தும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
நான்கு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பிரதமர் மோடி எதிர்பார்த்தப் பலன் கிட்டவில்லை. தற்போது மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவானது, இந்தியாவில் ஊரடங்கை தளர்த்துவது என்பதே, ஆனால் இது எந்த வகையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் உதவும் என்று தெரியவில்லை.
ஏழை மக்களின் தற்போதைய தேவை பணம்தான். அதனை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஏழை மக்களுக்கும், தொழிற்துறைக்கும் மத்திய அரசு நிதியுதவி செய்யாவிட்டால், அது மோசமான நிலையை உருவாக்கிவிடும்.
மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், மத்திய அரசின் உதவி கிடைக்காமல் செயல்படுவது என்பது மிகவும் கடினமானது என்று ராகுல் கூறியுள்ளார்.