ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டட உட்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், தனியார் ஆங்கில செய்தித்தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
கட்டட உற்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த வழக்கை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் மும்பை காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில், இதனைக் கண்டித்து பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் பா.ஜ.க. கொடியினை ஏந்தி பேரணியாகச் சென்ற அவர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோன்று குஜராத் மாநிலம் போபாலிலும் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பத்திரிகை மற்றும் ஊடகவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.