நாட்டில் குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதம்: மத்திய அரசு
நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"கடந்த 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது. தினசரி கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் சராசரி சதவிகிதமும் குறைந்து வருகிறது. சமீப நாள்களாக புதிதாக தொற்று உறுதி செய்யப்படுவோரைக் காட்டிலும் குணமடைவோரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.
Advertisement
நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரில் 77 சதவிகிதத்தினர் மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ளனர். கரோனா தொடர்பான உயிரிழப்புகளில் 48 சதவிகித உயிரிழப்புகள் 25 மாவட்டங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. அந்த 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தது. கரோனா தொடர்பான உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்த மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கரோனா இறப்பு விகிதத்தை 1 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கொண்டு வருவதே இலக்காக உள்ளது."