பிகார் சட்டமன்றத் தேர்தலுக்காக முதன்முறையாக இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
பிகாரில் வரும் 28-ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.
இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், பிரதமருக்கு நெருக்கமான மாநிலங்களில் பிகாரும் ஒன்று. பிகாரின் சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். பிரதமர் மோடியின் நேரடிப் பிரசாரம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை எளிமையாக்கும் என்று கூறினார்.