இந்தியாவில் மருந்துப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்
மருந்துப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை இந்தியா அறிமுகம் செய்துள்ளது என நீதி ஆயோக் தலைமை நிர்வாக அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை இந்தியா அறிமுகம் செய்துள்ளது என நீதி ஆயோக் தலைமை நிர்வாக அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-இந்தியா தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில், மருந்து உற்பத்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து இணையவழியில் நடைபெற்ற மாநாட்டில் அமிதாப் காந்த் பங்கேற்றுப் பேசியது:
அடிப்படை மூலக்கூறு மருந்துகளுக்கான (ஜெனரிக்) உலகளாவிய மையமாக இந்தியா திகழ்கிறது. சீன விநியோகத்தை பெரிதும் நம்பியுள்ள சூழலில், மருந்துப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை இந்தியா தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்துப் பொருள்களை முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறோம். புதிய தடுப்பூசி மருந்துகள் மற்றும் பிற மருந்துகளின் விநியோகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தனியார் துறையுடன் இணைந்து மருந்து கண்டுபிடிப்பை எளிதாக்குவதற்கான பரிசோதனை மற்றும் ஒப்புதல் நடைமுறை தொடர்பான சீர்திருத்தங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. மருந்து கண்டுபிடிப்பு, மருந்து உற்பத்தியில் உலகளாவிய தலைமையகமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட "பார்மா விஷன் -2020' சாதனையை அடைய உறுதி பூண்டுள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தன்று தேசிய டிஜிட்டல் சுகாதார ஆணையத்தை தொடங்கிவைத்தார். இதன்படி, தனி நபர்களுக்காக மின்னணு சுகாதார ஆவண காப்பகம் உருவாக்கப்படும். ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கரோனா தீநுண்மியால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கனோர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தில் உலகளாவிய சுகாதார நெருக்கடியைத் தூண்டியதாக சீனாவை கடுமையாகக் குற்றம் சாட்டி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இதையடுத்து தங்கள் உற்பத்தித் தளம் மற்றும் முக்கியப் பொருள்களின் உற்பத்திக்கு, பல நாடுகள் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை உற்றுநோக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.