மகாராஷ்டிரத்தில் 4 மணி நேரத்தில் 8 நிலநடுக்கங்கள் பதிவு
மகாராஷ்டிர மாநிலம் பல்கர் பகுதியில் 4 மணிநேரத்திற்குள் 8 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பல்கர் பகுதியில் 4 மணிநேரத்திற்குள் 8 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நான்கு மணி நேரத்திற்குள் 2.2 முதல் 3.6 ரிக்டர் அளவிலான எட்டு குறைந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கங்களால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அதிகாலை 3.29 மணியளவில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து 3.5 மற்றும் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் முறையே அதிகாலை 3.57 மற்றும் காலை 7.6 மணிக்கு ஏற்பட்டது" என்று மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத் தலைவர் விவேகானந்த் கதம் தெரிவித்தார்.
தஹானு பகுதி துணை அலுவலர் ஆஷிமா மிட்டல் கூறுகையில், "இவை தவிர, 3.0 ரிக்டர் அளவுக்கு மேல் இருந்த மூன்று நிலநடுக்கங்கள் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி அளவிலான நேரத்தில் ஏற்பட்டன. அவற்றின் அளவு 2.2 முதல் 2.8 ரிக்டர் வரை இருந்தது." எனத் தெரிவித்தார்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதையடுத்து, அப்பகுதி கிராமங்களில் திறந்தவெளி மைதானத்தில் பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளூர்வாசிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மாவட்ட அதிகாரிகள் நிலநடுக்கம் பாதித்த தஹானு பகுதியில் வசிக்கும் கிராம மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தலசாரி மற்றும் தஹானுவில் சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் பல வீடுகளிலும் விரிசல் காணப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம அளவில் பேரிடர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.