புத்தகத்தை வைத்து தேர்வெழுத புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வெழுதும் மாணவர்கள் புத்தகத்தை வைத்துத் தேர்வெழுதப் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வெழுதும் மாணவர்கள் புத்தகத்தை வைத்துத் தேர்வெழுதப் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதியாண்டு தேர்வு மட்டும் நடத்தலாம் என்று யுஜிசி அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வெழுதலாம். மேலும், யுஜிசி பரிந்துரையின்படி இறுதியாண்டு தேர்வெழுதும் மாணவர்கள் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருள்களைப் பார்த்துத் தேர்வெழுத அனுமதி அளித்துள்ளது.
மாணவர்கள் கேள்விகளுக்கான பதில்களைப் புரிந்துகொண்டு பதில் அளிக்க இந்தமுறை உதவியாக இருக்கும். மேலும் கரோனா தொற்று பரவாமல் இருக்க மாணவர்கள் தங்கள் புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை பரிமாறாமல் இருப்பதைத் தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு நடத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.