தில்லி: 'வீடுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகிக்கத் திட்டம்'
தில்லியில் உள்ள வீடுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் அதனை கண்காணித்து பரிந்துரைக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்
தில்லியில் உள்ள வீடுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் அதனை கண்காணித்து பரிந்துரைக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், ''தில்லியில் தற்போது 24 மணி நேர மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. மழை மற்றும் சேமிப்பு மூலம் தில்லிக்கு கிடைக்கும் நீர் ஆதாரத்தில் அனைத்து மக்களும் சராசரியாக 176 லிட்டர் தண்ணீரைப் பெற முடியும்.
நீர் மேலாண்மையால் இரண்டு கோடி தில்லிவாசிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அது முறையாக பயன்படுத்தப்படவில்லை.
இயற்கையாக கிடைக்கும் நீர் எங்கே போகிறது?. நீர் மேலாண்மையில் தண்ணீர் திருடப்படுகிறது அல்லது கசிந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.
இது நீர் மேலாண்மை சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என்பதையே குறிக்கிறது. இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண தில்லி அரசு ஒரு ஆலோசகரை நியமிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஆய்வு செய்து தண்ணீர் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஆலோசகர் தெரிவிப்பார்'' என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.