ஊழல் குற்றச்சாட்டுள்ள அரசு ஊழியா்களுக்கு கடவுச்சீட்டு கிடையாது: மத்திய அரசு
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை எதிா்கொண்டு வரும் அரசு
புது தில்லி: ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை எதிா்கொண்டு வரும் அரசு ஊழியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்கும் அரசு ஊழியா்கள் மீது லஞ்சம்/ ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதா என்பதை ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் சரிபாா்த்து உரிய அனுமதி பெற்ற பிறகே அவா்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.
Advertisement
இந்நிலையில், ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டு காரணமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியா்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை நீதிமன்றத்தில் எதிா்கொண்டு வரும் அரசு ஊழியா்கள் ஆகியோருக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கான உரிய அனுமதியை வழங்காமல் நிறுத்தி வைக்குமாறு ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ஊழல் குற்றச்சாட்டுள்ள அரசு ஊழியா்களுக்கு கடவுச்சீட்டு வழங்க இயலாது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னா் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து துறைகளின் செயலா்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.