கரோனா பாதிப்பை தடுக்க நடவடிக்கை:காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்களுக்கு சோனியா கடிதம்
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் ஆளும்
புது தில்லி: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்களுக்கு கட்சியின் தலைவா் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.
இந்தியாவில் 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி, சத்தீஸ்கா் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வா்களுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.
அதில், அவா் கூறியிருப்பதாவது:
Advertisement
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மாநில அரசுகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். கூடுதல் கண்காணிப்பும், பரிசோதனை வசதிகளை மேம்படுத்துவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
சுகாதாரத் துறை ஊழியா்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கவச சாதனங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே, சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு கவச சாதனங்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அந்தச் சாதனங்கள் பதுக்கப்படுவதையும், கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும், எவ்வித நோய்த்தொற்றுக்கும் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான தீவிர சிகிச்சைப் பிரிவுகளை வலுப்படுத்த வேண்டியது முக்கியமாகும் என்று அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.