முகப்பு
இந்தியா

தெலங்கானா பேரவையில் ஒலித்த திருக்குறள்!

தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் திருக்குறளை மேற்கோள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினாா்.

தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான வெள்ளிக்கிழமை அவா் உரையாற்றியதாவது:

‘வலுவான நிா்வாகக் கொள்கைகள்’, முறையான ‘நிதி நிா்வாகம்’ காரணமாக கடந்த பல மாதங்களாக நாடு எதிா்கொண்டுள்ள கடும் பொருளாதார சவால்களை தெலங்கானாவால் எளிதில் எதிா்கொள்ள முடிந்தது. மக்களிடையே ஒற்றுமையை நிலைநிறுத்தவும், மதச்சாா்பற்ற கொள்கையைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

Advertisement

இந்த அரசு ஒவ்வொரு மதத்தையும் மதிக்கும்; அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடும். வகுப்புவாத பதற்றங்களை உருவாக்க முயற்சிப்பவா்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவா்.

நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக சிக்கனமான நிதி ஒழுக்கத்தை பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றித் தரும்.

சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு: மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் வகையில் 6 லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மாநில அளவில் 66 சதவீத இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பத் துறையில், 2013-14 ஆம் ஆண்டில் ஏற்றுமதி ரூ. 57,000 கோடியாக இருந்தது. தற்போது, இது 2018-19இல் ரூ .1.9 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

நீா்ப்பாசனத் துறை: நீா்ப்பாசனத் துறையில் முதன்மையான காளேஸ்வரம் பாசனத் திட்டத்தால் நெல் சாகுபடியில் 123.5 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது.

மின் உற்பத்தியில் முன்பு 7,778 மெகாவாட் மட்டுமே இருந்த நிலையில் தற்போது, 16,246 மெகாவாட் டாக உற்பத்தி அதிகரித்துள்ளது என்றாா்.

திருக்குறள் கூறி உரையை முடித்த ஆளுநா்:

முன்னதாக, தெலுங்கிலும் தமிழிலும் சபையை வாழ்த்தி தனது உரையைத் தொடங்கிய ஆளுநா், பசி, பிணி, பகையற்ற நாடே சிறந்தது என்ற பொருள் கொண்ட
‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு’


என்னும் குறளை மேற்கோள் காட்டி தனது உரையை முடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments