பிகார் தேர்தல்: லோக் ஜனசக்தி தேர்தல் அறிக்கை வெளியீடு
பிகாரில் சட்டமன்றத் தேர்தலையொட்டி லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிகாரில் சட்டமன்றத் தேர்தலையொட்டி லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிகாரில் வரும் 28-ஆம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.
இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கு கடந்த 8-ஆம் தேதி ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி சார்பில் 42 முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதனையடுத்து 2-வது கட்டமாக நவம்பர் 3-ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 26 வேட்பாளர்களை கடந்த 16-ஆம் தேதி லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தனித்துப்போடியிடும் லோக் ஜனசக்தி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மட்டும் ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார்.
பின்னர் பேசிய அவர், ''பிகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளேன். பிகார் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பிகாருக்கு முதலிடம், பிகாரிகளுக்கு முதலுரிமை என்ற பார்வையை உங்கள் முன்புவைக்கிறேன். இது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என நம்புகிறேன்'' என்று கூறினார்.