லக்னௌ: நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் அடித்துவரும் நிலையில், கவலை தரும் புதிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, நாட்டில், ஏற்கனவே கரோனா பாதித்து, தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபிறகு, இரண்டு டோஸ் ஊசிகளையும் போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு இப்போது மீண்டும் கரோனா தொற்று பாதித்து வருவதே அந்த அதிர்ச்சித் தகவலாகும்.
அதுவும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களில் இந்நிலை அதிகமாக உள்ளது.
இதையும் படிக்கலாமே.. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா
லக்னௌவில் மட்டும் கடந்த சில நாள்களில் இதுவரை 40 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேஜிஎம்யு பல்கலை துணைவேந்தர் லெப்டினல் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் விபின் புரிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மாதங்களில் இரண்டாவது முறையாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மார்ச் 25-ஆம் தேதி கரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. துணைவேந்தர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோல அதே மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் சில மருத்துவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேஜிஎம்யு பல்கலை மற்றும் மருத்துவமனையில் மட்டும் சுமார் 45 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கரோனா தாக்கும் என்றாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கரோனா தாக்கினாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமோ, உயிரிழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுவதாக மருத்துவர் திமன் கூறியுள்ளார். சிறு அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோல, பிகார் மாநிலத்திலும், ஏற்கனவே கரோனா பாதித்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட 26 மருத்துவர்களுக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதுபோல, பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் 9 மருத்துவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிகாரில் மேலும் சில மருத்துவமனைகளிலும் கூட பல மருத்துவர்களுக்கு இரண்டாவது முறையாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருமே கரோனா இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.