புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை காலை எடுத்துக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை காலை எனது இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்.
தொற்றை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசி உள்ளது. தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு தகுதியுடையவராக நீங்கள் இருந்தால், விரைவில் உங்களுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தில்லி எய்ம்ஸில் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் இரண்டு செவிலியர்கள் ஈடுபட்டனர். அவர்களில், புதுச்சேரியைச் சேர்ந்த பி.நிவேதா மற்றும் பஞ்சாபை சேர்ந்த நிஷா சர்மா.
இதுகுறித்து நிஷா சர்மா கூறுகையில், கோவாக்சின் இரண்டாவது டோஸை வியாழக்கிழமை காலை தில்லி எய்ம்ஸில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளேன். அவர் எங்களிடம் பேசினார். அவரைச் சந்தித்து அவருக்கு தடுப்பூசி செலுத்தியது எனக்கு ஒரு மறக்கமுடியாத தருணம் என்று நிஷா சர்மா தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் தனது முதல் டோஸை மார்ச் 1 ஆம் தேதி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது வரை 9 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கோவோக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. நாட்டில் கரோனா தடுப்பூசியின் முதல் கட்ட பயன்பாட்டை ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.