கோவாவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது: முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவாவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கோவாவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே கோவா முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் மே 3-ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோவாவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு, கரோனா தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை. தடுப்பூசி கிடைத்தவுடன் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்குவோம். பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படாது. வீட்டிலேயே இருந்து அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.