' புலிட்சர் ' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் தலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடக்கும் போரைப் பதிவு செய்வதற்காக ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படையுடன் போர் நடக்கும் பகுதிக்குச் சென்றார்.
எதிர்பாராத விதமாக தலிபான்கள் தாக்குதலில் சிக்கி தானிஷ் சித்திகி பலியானார். அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் சித்திகின் மரணத்திற்காக தலிபான்களை எச்சரித்தனர் . பின் அடுத்த நாளே தலிபான்கள் சார்பில் " சித்திகி அப்பகுதியில் இருந்த தகவலை அரசு தெரிவிக்கவில்லை . தெரிந்திருந்தால் தாக்குதலை நடத்தியிருக்க மாட்டோம்" என்றதோடு சித்திகியின் மரணத்திற்கு மன்னிப்பும் கேட்டனர்.
இதையும் படிக்க | புகைப்படக்காரர் தானிஷ் சித்திகி கொலை? அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தானிஷ் சித்திகி இருப்பதைத் தெரிந்து கொண்டுதான் தலிபான்கள் அவரைக் கொன்றனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது.
இதையும் படிக்க | புகைப்பட பத்திரிகையாளர் சித்திகி மறைவிற்கு ஐநா இரங்கல்
தற்போது தானிஷ் சித்திகியின் உடற்கூறாய்வு முடிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் தானிஷ் உடலில் 12 குண்டுகள் இருந்ததாகவும் முகத்திலும் மார்பிலும் வாகனங்களை ஏற்றி எலும்புகள் உடைக்கப்பட்டிருக்கின்றன என்றும் இறந்த உடலை வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. முழுக்க முழுக்க தலிபான்கள் கொடூரமாக சித்தரவதை செய்து சித்திகியை கொன்று இருக்கிறார்கள் என அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது .