தில்லி விமான நிலையத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மாநில காவல்துறைக்கு இமெயில் வந்துள்ளது.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மாநில காவல்துறைக்கு இமெயில் வந்துள்ளது.
இதுகுறித்து விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணைக்கு பிறகு, மிரட்டல் பொதுவாக விடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. எனவே, வெடிகுண்டு நிபுணர் குழு விமான நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளது.
இருப்பினும், எச்சரிக்கை விடுக்கப்பட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் என்ற தலைப்பில் இமெயில் ஒன்று வந்தது.
இதையும் படிக்க | ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?
அதில், முகமத் ஜலால் என்ற கரன்பீர் சூரி மற்றும் அவரின் மனைவி ஷைலி சாரதா என்ற ஹசீனா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வரவுள்ளனர். 1 முதல் 3 நாள்களுக்குள் வெடி குண்டு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமான சேவை கட்டுப்பாட்டு மையத்திற்கு விமான நிலைய காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.
வெடுகுண்டு மிரட்டல் குறித்து பாதுகாப்பு செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையம் விசாரணை நடத்தியது. அதில், இமெயிலில் குறிப்பிட்ட தகவல்கள் அடங்கிய அதே மிரட்டல் முன்னர் ஒரு முறை விடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.