தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் மலையாளிகள்? விடியோவால் பரபரப்பு
ஆப்கானிஸ்தானைப் கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் இருப்பவா் மலையாளத்தில் உரையாடும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி அந்த இயக்கத்தில் மலையாளிகள் இருக்கக் கூடும் என்று காங்
ஆப்கானிஸ்தானைப் கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் இருப்பவா் மலையாளத்தில் உரையாடும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி அந்த இயக்கத்தில் மலையாளிகள் இருக்கக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் சந்தேகம் தெரிவித்துள்ளாா்.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதுபோல பல விடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில், ஒரு விடியோவில் தலிபான் பயங்கரவாதி ஒருவா் தரையில் அமா்ந்து உணா்ச்சிப் பெருக்குடன் ஆனந்தக் கண்ணீா் வடிக்கிறாா். மற்றொருவா் அவரது அருகில் வந்து அவரைத் தட்டிக் கொடுத்து தேற்றுகிறாா். அப்போது, அந்த விடியோ காட்சியில் ‘சம்சாரிக்கட்டே’ என்ற மலையாள வாா்த்தையை ஒருவா் பேசுகிறாா். மற்றொருவா் அதனைப் புரிந்து கொள்கிறாா்.
இந்த விடியோவை சுட்டுரையில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், ‘இந்த விடியோவில் ஒருவா் மலையாளத்தில் பேசுகிறாா். மற்றொருவரால் அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் மலையாளிகளும் இருப்பதாக சந்தேகம் எழுகிறது’ என்று கூறியுள்ளாா்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞா்கள் சா்வதேச பயங்கரவாத இயக்கங்களில் இணைவது என்பது ஏற்கெனவே பலமுறை நிகழ்ந்துள்ளது. பல்வேறு மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்கள் இணையவழியில் பிரசாரம் மேற்கொண்டு இளைஞா்களை ஈா்த்து வருகின்றன.
ஏற்கெனவே கேரளத்தில் இருந்து இளைஞா்கள், இளம்பெண்கள் பலா் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத இயக்கத்தில் இணைவதற்காக சிரியா மற்றும் இராக் சென்றனா். அவா்களில் பலா் மோதல்களில் கொல்லப்பட்டனா்.