ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு: கணவர் மீது பெண் புகார்
ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மும்பை: ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்திருக்கும் பெண், ஓய்வு பெற்ற நீதிபதியின் மகளாவார்.
இதையும் படிக்கலாமே.. 'நம்பி ஏமாறாதீர்கள்.. இப்படியும் சொல்வார்கள்' காவல்துறை அலர்ட்
அவர் அளித்திருக்கும் புகாரில், கடந்த 2007ஆம் ஆண்டு வழக்குரைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குடும்பத்தினரும் வழக்குரைஞர்கள் என்றும் தெரிவித்துள்ளார். கணவரின் தங்கை மருத்துவராக உள்ளார். திருமணமான சில காலத்தில், அடித்த உதைத்து துன்புறுத்தியிருப்பதாகவும், தனக்கு மகன்தான் பிறக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறகு 2011ல், மீண்டும் கருத்தரித்துள்ளார். ஆனால், தனக்கு தற்போது குழந்தை வேண்டாம் என்று கருக்கலைப்பு செய்ய நிர்பந்தித்துள்ளார்.
அதன்பிறகு, ஆண் குழந்தைக்காக, அவரை வெளிநாடு அழைத்துச் சென்று அங்கு ஹார்மோன் சிகிச்சை என்று கூறி ஆயிரக்கணக்கான ஹார்மோனல் மற்றும் டீராய்டு ஊசிகளை செலுத்தியுள்ளனர். கருவின் பாலினத்தை அறிதல் போன்றவை இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதற்காகவே வெளிநாடு சென்று குழந்தையின் பாலினத்தை அறிந்து எட்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளனர் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், வரதட்சிணைக் கொடுமை, மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.