பண மோசடி வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிக்கும் அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.
நிலக்கரி கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிக்கும் அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. புது தில்லியில் உள்ள அலுவலகத்திற்கு அபிஷேக் பானர்ஜி செப்டம்பர் 6ஆம் தேதியும் அவரது மனைவி 1ஆம் தேதியும் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ஆகியோரின் வழக்கறிஞரான சஞ்சய் பாசு செப்டம்பர் 3ஆம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், மேற்கு வங்க மூத்த ஐபிஎஸ் அலுவலர்கள் சியாம் சிங், கியான்வந்த் சிங் ஆகியோர் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானர்ஜி, மம்தா பானர்ஜியின் மருமகன் ஆவார். மேற்குவங்கத்தில் அரசு அலுவலர்களின் உதவியோடு அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்களிலிருந்து திருட்டு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்திருந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் பண மோசடி வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க | மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐவர் கைது
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அபிஷேக் பானர்ஜியின் மனைவி ரூஜிராவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.