தெலங்கானாவில் மார்ச் 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசியின் கீழ் 55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் 45 வயதைக் கடந்த இணைநோய்கள் உள்ளோருக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட 45 லட்சம் பேரும், 45-60 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 10 லட்சம் பேரும் மாநிலத்தில் இணை நோயுற்றவர்களாக இருப்பதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
எனவே, இதை இரு குழுக்களாக உள்ளடக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 1,500 மையங்களை அமைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
தெலங்கானாவில் தற்போது ஆறு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாள்களில் மேலும் 10 லட்சம் பெற உள்ளதாகவும் சுகாதாரத் துறை எதிர்பார்க்கிறது.
இந்த தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரோக்கியஸ்ரீ அறக்கட்டளையுடன் தொடர்புடைய 230 தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 1,000 ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கும் தடுப்பூசிக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.