தில்லி வன்முறைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கேஜரிவால்
தில்லி வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து குடியரசு நாளன்று ஏராளமான விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த பேரணியில், காவலர்களுக்கும் - விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காவலர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், பேரணியில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். 300 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ''ஜனவரி 26-ம் தேதி எதிர்பாராதவிதமாக கலவரம் ஏற்பட்டது. கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்று என்ன நடந்திருந்தாலும் விவசாயிகளின் இயக்கத்தை நிறுத்த முடியாது. நாம் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். ஆனால் அவை அமைதியான முறையில் இருக்க வேண்டும்'' என்று கூறினார்.