மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரக் ஓ பிரையன், திமுகவின் திருச்சி சிவா, சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதீஸ் மிஸ்ரா உள்பட பல்வேறு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரும் அனைத்துக்கட்சி கூட்டதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தொடரின் முதல் நாளில், புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.