சிறுத்தை தாக்கியதில் சிறுவன் பலி
கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 வயதுச் சிறுவன் சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.
உத்தரகாண்ட் : நேற்று (செவ்வாய்கிழமை ) மாலை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.
பித்தோராகர் மாவட்ட வனச்சரக அதிகாரி அளித்த தகவலில் ' லாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் அவனது தங்கையும் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்து பாய்ந்த சிறுத்தை சிறுவனை தாக்கியிருக்கிறது. பலத்த காயத்துடன் கிடந்த சிறுவனை சிறுத்தை இழுத்துக்கொண்டு வனத்திற்குள் சென்றது. இதை பார்த்து பயந்த சிறுவனின் தங்கை அழுதபடி கிராமத்தார்களிடம் நடந்ததைச் சொன்னதும் பதறிக்கொண்டு வந்த மக்கள் சிறுத்தை தாக்கிய இடத்தில் இருந்து சில அடிகளைத் தாண்டி சிறுவனின் உடல் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் தாக்கப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டான் ' எனத் தெரிவித்தார்.