கர்நாடக பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? தர்மேந்திர பிரதான் விளக்கம்
கர்நாடக பாஜகவின் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மையை எடியூரப்பா முன்மொழிய, கோவிந்த்கார்ஜோள் உள்ளிட்டோர் வழிமொழிந்ததாக மேலிடப் பார்வையாளர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பாஜகவின் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மையை எடியூரப்பா முன்மொழிய, கோவிந்த்கார்ஜோள் உள்ளிட்டோர் வழிமொழிந்ததாக மேலிடப் பார்வையாளர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மேலிடப் பார்வையாளர் தர்மேந்திர பிரதான் கூறியது:
"கர்நாடக பாஜகவின் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எடியூரப்பா முன்மொழிய, கோவிந்த்கார்ஜோள் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். கர்நாடகத்தில் பாஜக என்றால் அது எடியூரப்பா. கடந்த 50 ஆண்டுகால வாழ்க்கையை மக்கள் பணிக்காக அர்ப்பணித்துள்ளார்.
இதையும் படிக்க: கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு
எடியூரப்பா மற்றும் அவரது அணியின் கடினமான உழைப்பால் கர்நாடகத்தில் பாஜக இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.
அண்மையில் தில்லி வந்த எடியூரப்பா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கேட்டுக்கொண்டார். எடியூரப்பா போன்ற உயர்ந்த தலைவர்களால் கர்நாடகத்தில் கட்சி கிராமங்களிலும் வேர்பிடித்துள்ளது. எடியூரப்பா தொடர்ந்து பாஜகவுக்கு வழிகாட்டுவார்.
பாஜகவின் நாடாளுமன்றக் குழு, சட்டப்பேரவைக் குழுவின் ஆதரவுடன் பாஜக சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்றார் அவர்.
இதையும் படிக்க: புதிய அரசு எப்படி இருக்கும்? கர்நாடக முதல்வர் பொம்மை விளக்கம்
முன்னதாக, கீழே அமர்ந்திருந்த பசவராஜ் பொம்மை மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது எடியூரப்பாவின் காலில் விழுந்து பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார்.
அதைத் தொடர்ந்து, பசவராஜ் பொம்மைக்கு தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி, எடியூரப்பா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.