பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க பிரதமருக்கு என்ன பயம்? திக்விஜய் சிங்
பெகாஸஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பயப்படுவது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெகாஸஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பயப்படுவது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருளான பெகாஸஸ் மூலம் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங், “நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பயப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஒருவரை சட்டப்பூர்வமாகக் கண்காணிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் என்.எஸ்.ஓ. நிறுவனம் மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு இந்தியர்களின் தகவல்களை வழங்க யாரும் அரசுக்கு அனுமதி வழங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.