கேரளத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஆறு பேர் கொண்ட மத்தியக் குழு அங்கு செல்லவுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும், கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனிடையே, நிலைமையை கண்காணிக்கும் வகையில் ஆறு பேர் கொண்ட மத்தியக் குழு அங்கு செல்லவுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான குழு கேரளத்திற்கு வெள்ளிக்கிழமை செல்லவுள்ளது. கரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டர் பக்கத்தில், "கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு துணை நிற்கும் நோக்கில் மத்திய குழு செல்லவுள்ளது. மாநில சுகாதார அமைப்புகளுடன் இணைந்து குழு செயல்படும்" என பதிவிட்டுள்ளார்.