இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் அமைக்கப்பட்ட ரயில் பாதை: சரக்கு ரயில் சேவை இன்று தொடக்கம்
இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் அமைக்கப்பட்ட ஹல்டிபாரி-சிலாஹாட்டி ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரயில் சேவை தொடங்கவுள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் அமைக்கப்பட்ட ஹல்டிபாரி-சிலாஹாட்டி ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரயில் சேவை தொடங்கவுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹல்டிபாரி, வங்கதேச எல்லையில் உள்ள சிலாஹாட்டி இடையிலான ரயில் பாதை கடந்த 1965-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அந்த ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போா் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானான வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அனைத்து ரயில் இணைப்புகளையும் துண்டித்தது.
இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தில்லியில் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான ரயில்வே கூட்டத்தில் ஹல்டிபாரியில் இருந்து சிலாஹாட்டிக்கு மீண்டும் புதிதாக அகல ரயில் பாதை அமைக்க இந்திய ரயில் வாரியம் ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இந்தியப் பிரதமா் மோடியும், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவும் இணைந்து அந்தப் பாதையை திறந்து வைத்தனா்.
Advertisement
அந்தப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரயில் சேவை தொடங்கவுள்ளது. முதல் ரயிலில் ஹல்டிபாரியில் இருந்து சிலாஹாட்டிக்கு ஜல்லி கற்கள் அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.