சீரம் நிறுவனத்தின் தலைவரான சைரஸ் பூனவல்லாவுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராத்தில் உள்ள பூனேவை தலைமையகமாக கொண்டு இயங்கிவருகிறது சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம். இதன் தலைவரான சைரஸ் பூனவல்லாவுக்கு மதிப்புமிக்க லோகமான்ய திலகர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லோகமான்ய திலகர் அறக்கட்டளையின் தலைவர் தீபக் திலக் கூறுகையில், "கரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து பலரின் உயிரை காப்பாற்றியதற்காக பூனவல்லா சிறப்பிக்கப்படவுள்ளார்.
பூனவல்லாவின் தலைமையில் சிறிய கால அளவில் கோடிக்கணக்கான கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பூசிகளை தயாரித்து குறைந்த விலையில் கொடுப்பதில் பூனவல்லா மும்முரமாக உள்ளார்.
விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், ஒரு லட்சம் ரூபாயும் நினைவுச்சின்னமும் வழங்கப்படவுள்ளது. வருடாவருடம் திலகரின் நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி விருது வழங்கப்பட்டுவருகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு விருது வழங்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது" என்றார்.
1983ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டுவருகிறது. சோசியலிஸ்ட் தலைவர் எஸ்.எம். ஜோஷி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மன்மோகன் சிங், வாஜ்பாய், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.