நாட்டில் 30 கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 30 கோடி என்ற மைல்கல் சாதனையைக் கடந்துள்ளது.
புது தில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 30 கோடி என்ற மைல்கல் சாதனையைக் கடந்துள்ளது.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 40,45,516 முகாம்களில் 30,16,26,028 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 64,89,599 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 17-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 6,27,057 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 2.08 சதவீதமாகும்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,137 சரிந்துள்ளது. தொடர்ந்து 42-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 68,885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 14,816 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 2,90,63,740 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 96.61 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,59,469 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 39,78,32,667 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 3.04 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 2.91 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 17 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.