மேற்கு வங்கத்தில் மே 16-30 முழு ஊரடங்கு அறிவிப்பு
கரோனா பரவல் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 30 வரை மேற்கு வங்க அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
மேற்கு வங்கம்
கரோனா பரவல் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 30 வரை மேற்கு வங்க அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கூறியதாவது,
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மே 30 மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் கூறியுள்ளார்.
இந்த காலகட்டத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மால்கள், பார்கள், விளையாட்டு வளாகங்கள், விடுதிகள் மற்றும் அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
தனியார் வாகனங்கள், டாக்ஸிகள், பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களின் இயக்கமும் அடுத்த 15 நாள்களுக்கு அனுமதிக்கப்படாது.
மேலும், பெட்ரோல் பங்குகள், பால், தண்ணீர், மருந்து, மின்சாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படும்.
ஈ-காமர்ஸ் மற்றும் வீட்டு விநியோக சேவைகள் அனுமதிக்கப்படும் என்றார்.