உடல்களைத் தர மறுத்தால் உரிமம் ரத்து: தனியார் மருத்துவமனைகளுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை
கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவக் கட்டணத்தை செலுத்தும் வரை உடல்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவக் கட்டணத்தை செலுத்தும் வரை உடல்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான ஆணையை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.
அந்த ஆணையில், "கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்தினால் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் உடல்களை வழங்குவதாக வரும் செய்திகள் குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடக தனியார் மருத்துவ நிர்மாணச் சட்டம் 2007-ன் கீழ் எந்த மருத்துவமனையும் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் தர மறுக்கக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தால் கர்நாடக தனியார் மருத்துவ நிர்மாணச் சட்டம் 2007-ன் கீழ் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டங்களின் துணை ஆணையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்."