ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.70! 15 காசுகள் உயர்வு!
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.94.70ஆக இருந்தது.
மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தையின் சாதகமான தொடக்கம் மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் (புதன்கிழமை) காலை நேர வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.94.70ஆக இருந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 10 முதல், இந்திய வங்கிகள் தினசரி வணிக முடிவில் 100 மில்லியன் டாலர் அளவை கடந்து, 'நெட் ஓபன் பொசிஷன்' வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தியதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திய வங்கிகள் தங்களின் 'நெட் ஓபன் பொசிஷன்' குறைத்த போதிலும், அதீத கச்சா எண்ணெய் விலை மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி ஆகியவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு ரூ.93.62 என்ற வலுவான நிலையில் வர்த்தகம் தொடங்கியது. பிறகு அதன் முந்தைய நாள் நிலையை விட 15 காசுகள் உயர்ந்து, டாலருக்கு நிகாரன ரூ.94.70 ஆக வர்த்தகமானது.
நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) அமெரிக்க டாலரின் மதிப்பு முதல் முறையாக டாலருக்கு நிகராக ரூ.95 என்ற நிலையை கடந்து, பிறகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.94.85 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் நிலைபெற்றது.
ஸ்ரீ மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய செலாவணி சந்தை மூடப்பட்டிருந்தன.