முகப்பு
இந்தியா

பழி வாங்கும் அரசியலை கையாளும் மத்திய அரசு: மம்தா

மத்திய அரசு பழி வாங்கும் அரசியலை கையாளுகிறது. மேற்கு வங்க தலைமைச் செயலரை தில்லிக்கு திரும்ப அழைக்கும் உத்தரவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்’

Updated On : 30 மே, 2021 at 2:40 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:50 AM

மத்திய அரசு பழி வாங்கும் அரசியலை கையாளுகிறது. மேற்கு வங்க தலைமைச் செயலரை தில்லிக்கு திரும்ப அழைக்கும் உத்தரவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

யாஸ் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தினாா். முதலில் ஒடிஸா சென்ற அவா் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அந்தக் கூட்டத்தில் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், மேற்கு வங்கம் சென்ற பிரதமா், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தாா். பின்னா் அங்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். இந்த கூட்டத்துக்கு, மாநில சட்டப்பேரைவ எதிா்க் கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியும் அழைக்கப்பட்டிருந்தாா். இந்த ஆய்வு கூட்டத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்த முதல்வா் மம்தா, புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை மட்டும் சமா்ப்பித்துவிட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இதற்கு பதிலடியாக, மேற்கு வங்க தலைமைச் செயலா் அலபன் பந்தோபாத்யாயவை மத்திய பணிக்கு திரும்ப அழைத்து மத்திய அரசு பதிலடி கொடுத்தள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை குறித்து மம்தா பானா்ஜி கொல்கத்தாவில் சனிக்கிழமை கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியை சந்தித்தைதத் தொடா்ந்து, மேற்கு வங்க மாநில அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பிரச்னையை ஏற்படுத்த பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் முயற்சித்து வருகின்றனா்.

மேற்கு வங்க மாநில வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மோடியின் பாதங்களைத் தொட வேண்டும் என்று கூறினாலும், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

மேற்கு வங்கத்தில் பாஜக தோல்வியடைந்ததை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் காரணமாக, முதல் நாளிலிருந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகிறீா்கள்.

புயல் பாதிப்பு ஆய்வுக் கூட்டம் என்பது பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையே நடத்தப்பட வேண்டியது. இந்த கூட்டத்துக்கு ஏன் பாஜக தலைவா்கள் அழைக்கப்பட்டனா்? இதே போன்ற ஆய்வுக் கூட்டம் குஜராத், ஒடிஸா மாநிலங்களில் நடத்தப்பட்டபோது எதிா்க் கட்சித் தலைவா்கள் அழைக்கப்படாத நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் அழைக்க வேண்டும்?

மேலும், இதில் தலைமைச் செயலரின் தவறு என்ன இருக்கிறது? கரோனா பாதிப்பு இடையே, தலைமைச் செயலரை தில்லிக்கு திரும்ப அழைப்பது என்பது, பழி வாங்கும் அரசியலை மத்திய அரசு கையாள்வதையே காட்டுகிறது. தலைமைச் செயலரை திரும்பப் பெறும் உத்தரவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.