மும்பை ரயில் நிலையத்தில் முதல்முறையாக ‘அர்பன்பாட்’ எனப்படும் அதிநவீன ஓய்வு அறைகளை ரயில்வே துறை இணையமைச்சர் ராவ்சாகேப் தாதாராவ் பட்டீல் தன்வே திறந்து வைத்தார்.
உலகில் முதல்முறையாக ஒருவர் மட்டுமே படுக்கும் வகையில் குறுகிய இடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகளை உருவாக்கி ‘பாட்’ எனப் பெயரிட்டு ஜப்பான் அறிமுகப்படுத்தியது.
தொழில்ரீதியாக அல்லது தனிநபராக ஒரு இடத்திற்கு செல்வோர் குறிப்பிட்ட இடத்தில் ஒரு இரவு மட்டும் மலிவான விலையில் தங்குவதற்காக பாட் முறை உருவாக்கப்பட்டது.
இந்த ‘பாட்’ ஓய்வு அறையை மும்பை மத்திய ரயில் நிலையத்தில் முதல்முறையாக இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 48 படுக்கைகளை கொண்ட இந்த ஓய்வு அறைகள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில், பெண்கள் பிரத்யேக அறைகள் 7, 30 கிளாஸிக் அறைகள், 10 பிரைவேட் அறைகள், ஒரு மாற்றுத்திறனாளி அறையாகும். இந்த அறைகள், ஒருவர் படுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு அறைகளிலும் தொலைக்காட்சி, லாக்கர், இணையவசதி, கண்ணாடி, குளிரூட்டி, பொது இடத்தில் ஒவ்வொரு அறைக்கும் தனிக் கழிவறை உள்ளன.
இந்த அறைகளில் தங்குவதற்கு கட்டணமாக 12 மணிநேரத்திற்கு ரூ. 999 முதல் ரூ. 1499 வரையும், 24 மணிநேரத்திற்கு ரூ. 1999 முதல் 2999 வரையும் வசூலிக்கப்படுகிறது.
இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து அர்பன் பாட் என்ற நிறுவனம் இந்த அறைகளை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.