முகப்பு
இந்தியா

கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு: ஆந்திர அரசியலில் பரபரப்பு

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் ஆந்திர அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
கண்ணீர்விட்டு அழுத சந்திரபாபு நாயுடு
பகிர்:

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் ஆந்திர அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாநில சட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார்.

இதனால் ஆவேசமடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதமானது. இதனால் கோபமான சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து “கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் கட்சியினால் நான் அவமானப்படுத்தப்பட்டு வந்தாலும் பொறுமையுடன் இருந்தேன். இன்றைக்கு அவர்கள் எனது மனைவியை விமர்சித்துள்ளனர். நான் எனது வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தான் பேசிக் கொண்டிருந்த போது ஆளும் கட்சியினர் தனது பேச்சை நாடகம் என விமர்சித்ததாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தனது கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் தற்போது வேகமாகப் பரவி ஆந்திர அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments