புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக நடந்த பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மத்திய அரசின் அறிவிப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ''இது என் வீட்டு வாசல்ல நடந்தது, எல்லோரும் பாதுகாப்பா இருங்க'' - அதிர்ச்சி விடியோவை வெளியிட்ட நடிகர் ஷாந்தனு
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், “பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடங்கிவைத்த நீண்ட, அமைதியான போராட்டத்தின் பலனாக வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு எனது வணக்கங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.