குஜராத் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி; கோடி கணக்கில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றம்
குஜராத் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
குஜராத் அகமதாபாத்தில் இயங்கிவரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதையடுத்து, 500 கோடி ரூபாய் அளவில் அங்கு சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், சோதனை நடத்தப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கணக்கில் வராத 200 கோடி ரூபாய்க்கு மேலான வருமானத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஈட்டியுள்ளது ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களிடம் கணக்கில் வராத 200 கோடி ரூபாய்க்கு மேலான பணம் இருந்திருப்பதும் சோதனையில் சிக்கிய ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்மூலம், கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கு மேலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. இதில், ரொக்கமாக ஒரு கோடி ரூபாய் பணமும் 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிரதமா் மோடியுடன் பஞ்சாப் முதல்வா் சந்திப்பு: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்
24 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வளாகத்தில் இருந்து பலதரப்பட்ட ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, இந்நிறுவனம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுப்பட்டிருப்பது இந்த ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.