ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டத்தில் தசரா விழாவிற்காக ரூ.5 கோடி மதிப்பிலான ரூபாய் தாள்களால் தெய்வங்களை அலங்கரித்திருக்கிறார்கள்.
நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாசவி கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து ரூ.2000,500,200,100,50 மற்றும் 10 ரூபாய் தாள்களை ஓரிகாமி மலர்களாகவும் பூச்செண்டுகளாகவும் தயாரித்து பல்வேறு தெய்வங்களை அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | விஜயதசமியில் கோயில்கள் திறப்பா? முதல்வர் ஆலோசனை
நவராத்திரி அன்று செல்வத்தின் தெய்வமான தனலட்சுமியை பக்தர்கள் அதிகம் வழிபடுவதால் இந்த ரூபாய் அலங்காரம் செய்யப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு 5.16 கோடி எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நெல்லூர் மாவட்ட நகர்புற வளர்ச்சித் தலைவரும் கோயில் நிர்வாகியுமான முக்காலா துவராகாநாத் ‘ரூ.11 கோடி செலவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் புனரமைப்பு வேலைகள் முடிந்த பின் நடக்கும் விழா என்பதால் ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்காரம் செய்ய முடிவு செய்தோம். முன்னதாக 7 கிலோ தங்கமும் 60 கிலோ வெள்ளியும் பயன்படுத்தும் திட்டம் இருந்தது இருப்பினும் நிதிப்பற்றாக்குறையால் அதைச் செய்யமுடியவில்லை ‘ எனத் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கானாவின் ஜோகுலாம்பா ஜாத்வா மாவட்டத்தில் உள்ள கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் ரூ.1,11,11,111 மதிப்பிலான ரூபாய் தாள்களால் தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டதும் 2017-ஆம் ஆண்டில் இதே கோயிலில் ரூ.3,33,33,333 தாள்கள் அலங்கரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.