பெங்களூரு: நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கக் கூடுமோ என்ற அச்சத்தில் அனைவருமிருக்க, பெங்களூருவில் சுவாசப் பிரச்னைகளோடு அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மூச்சக்குழல் அழற்சி உள்ளிட்ட மூச்சுப் பிரச்னையோடு அனுமதிக்கப்படும் நோயாளிகளால், பெங்களூரு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வருகின்றன என்கிறது புள்ளிவிவரங்கள்.
இதையும் படிக்கலாமே.. கதையல்ல நிஜம்: ஆறு மகள்களையும் மருத்துவர்களாக்கிய கேரள தம்பதி
அது மட்டுமல்ல, மேலும் அதிர்ச்சி தரும் வகையில், பிறந்த 2 மாதம் முதல் 2 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு அதிகளவில் நெஞ்சுத் தொற்று, நிமோனியா, வேகமாக மூச்சுவிடும் பிரச்னை போன்ற நோய்களுடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பெற்றோர் கவனமுடன் பிள்ளைகளை கவனிக்க வேண்டும். சாதாரண சளி மற்றும் இருமல் என்று மூச்சுப் பிரச்னையை நினைத்துவிடக் கூடாது என்கிறார் கொலம்பியா - ஆசியா மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சுப்ரஜா சந்திரசேகர்.
குழந்தை ஒன்று அல்லது அதற்கும் குறைவான வயதுடையதாக இருந்து, ஒரு நிமிடத்துக்கு 60 முறைக்கும் அதிகமாக மூச்சு விட்டாலோ, 5 வயதுக்குள்பட்ட குழந்தையாக இருந்து, ஒரு நிமிடத்துக்கு 40 முறைக்கும் அதிகமாக மூச்சு விட்டாலோ, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்து ஒரு நிமிடத்துக்கு 30 முறைக்கும் மேல் மூச்சு விட்டாலோ, உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பது அவசியம்.
அதுபோலவே, குழந்தைகளுக்கு மூன்று நாள்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்து, தண்ணீர் கூட குடிக்க முடியாமல், 2 நாள்கள் வாந்தி எடுத்தால் அதுவும் எச்சரிக்கை செய்திதான் என்கிறார்கள்.