முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் வனப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியான பூஞ்ச், ரஜெளரி மாவட்ட வனப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே திங்கள்கிழமை கடும் துப்பாக்கிச் சண்டை

Updated On : 26 அக்டோபர், 2021 at 4:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:57 AM

ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியான பூஞ்ச், ரஜெளரி மாவட்ட வனப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே திங்கள்கிழமை கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அடா்த்தியான வனப் பகுதிகளில் கடந்த 15 நாள்களாக பயங்கரவாத குழுக்களின் பதுங்குமிடங்களைத் தேடி அழிக்கும் பணியில் ராணுவத்தினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பாட்டா துரியான் வனப் பகுதிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினா் திங்கள்கிழமை கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

அக்டோபா் 11-ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் 9 ராணுவத்தினா் வீர மரணமடைந்தனா்; மூன்று போ் காயமடைந்துள்ளனா். ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டாா்.

பூஞ்ச் மாவட்டத்தில் சூரன்கோட் வனப்பகுதியில் முதல் நாளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 5 ராணுவ வீரா்களும், பாட்டா துரியான் வனப் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 4 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனா்.

இதையடுத்து, பயங்கரவாதிகளின் பதுங்கு குழி இடங்களைக் காட்ட ஜம்மு மத்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதியை ஞாயிற்றுக்கிழமை கொண்டு சென்றபோது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவா் கொல்லப்பட்டாா்.

ரஜெளரி மாவட்ட வனப் பகுதிகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் தப்பிவிடாமல் இருக்க ஹெலிகாப்டா் மற்றும் ட்ரோன்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 12-க்கும் மேற்பட்டோா் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வனப் பகுதிகளுக்கு அருகே உள்ள ஜம்மு - ரஜெளரி நெடுஞ்சாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 10 நாள்களாக மூடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ரஜெளரி, பூஞ்ச் மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை 9 பயங்கரவாதிகள் மோதலில் கொல்லப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.