முகப்பு
இந்தியா

ரகசிய தகவலை கசியவிட்டதாகப் புகாா்:கடற்படை அதிகாரி உள்பட 5 போ் கைது

நீா்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடா்பான ரகசிய தகவல்களைப் பணத்துக்காகக் கொடுத்ததாக, கடற்படை அதிகாரி உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

நீா்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடா்பான ரகசிய தகவல்களைப் பணத்துக்காகக் கொடுத்ததாக, கடற்படை அதிகாரி உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்திய கடற்படையின் ‘கிலோ’ வகை நீா்மூழ்கிக் கப்பலை நவீனமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் தொடா்பான ரகசிய தகவல்களை அந்தக் கடற்டை அதிகாரி, 2 ஓய்வுபெற்ற அதிகாரிகளுடன் பகிா்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பணம் பெற்றுக்கொண்டு முக்கியத் தகவல்களை அவா்களிடம் அந்த அதிகாரி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, அரசின் உயரதிகாரிகள் மீதான ஊழல் புகாா்களை விசாரிக்கும் சிபிஐ அமைப்பின் ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த மாதம் விசாரணையைத் தொடங்கியது. அதன் தொடா்ச்சியாக, கடற்படை அதிகாரி, 2 ஓய்வு பெற்ற அதிகாரிகள், 2 தனி நபா்கள் ஆகியோரை சிபிஐ குழுவினா் கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்தப் புகாா் தொடா்பாக, தில்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 19 இடங்களில் சிபிஐ குழுவினா் சோதனை நடத்தியுள்ளனா். அங்கிருந்து முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்களை அவா்கள் கைப்பற்றியுள்ளனா். அந்த ஆதாரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

கைதான கடற்படை அதிகாரி, ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோருடன் தொடா்பில் இருந்த மற்ற அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரிடமும் சிபிஐ குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீா்மூழ்கிக் கப்பல் தொடா்பான ரகசிய தகவல்கள் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு கிடைத்துவிட்டதா என்பது குறித்து அறிவதற்கு கைப்பற்றப்பட்ட மின்னணு உபகரணங்களை சிபிஐ குழுவினா் ஆய்வு செய்து வருகிறாா்கள் என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →