உங்களுக்குப் பிடித்த உணவகம் மூடப்பட்டுவிட்டதா? காரணம் இதுதான்
எப்போதும் வழக்கமாகச் செல்லும் உணவகம்.. அதுவும் நமக்கு மிகவும் பிடித்த உணவகம் மூடப்பட்டுவிட்டால்... மனவருத்தம் ஏற்படத்தான் செய்யும்.
புது தில்லி: எப்போதும் வழக்கமாகச் செல்லும் உணவகம்.. அதுவும் நமக்கு மிகவும் பிடித்த உணவகம் மூடப்பட்டுவிட்டால்... மனவருத்தம் ஏற்படத்தான் செய்யும்.
ஆனால், ஒரு பேரிடர் வந்து, அதனால் பல முன்னணி உணவகங்கள் உள்பட நாட்டில் 25 சதவீத உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளராக நமக்கு மட்டுமல்ல, அதில் பணியாற்றிய சுமார் 24 லட்சம் பேர் வேலையும் இழந்துள்ளனர் என்றால் அது எவ்வளவு பெரிய துயரம்.
பொதுமுடக்கம் காரணமாக, உணவகங்களை மூடிவிட்டு, அதற்கு வாடகைக் கொடுக்க முடியாமல், போதுமான ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியாமல், மீண்டும் அவர்களை பணியமர்த்த முடியாமல் நிரந்தரமாக மூடப்பட்ட உணவகங்கள் ஏராளம்.
Advertisement
இதையும் படிக்கலாமே.. 24 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்
நாட்டில் கரோனா பேரிடர் ஏற்படுத்திய பல பாதிப்புகளிலிருந்து மீண்டு வர இயலாமல் தவிக்கும் துறைகளில் இந்திய உணவுத் தொழிலும் ஒன்று.
2021ஆம் நிதியாண்டில் இந்திய உணவுத் தொழிலின் முதுகெலும்பை கரோனா பேரிடர் முறித்துப் போட்டதால், கால்பங்கு உணவகங்கள் மூடப்பட்டன. இதனால் 24 லட்சம் பேர் வேலையிழந்து வீடடைந்தனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக, இந்திய உணவுத் தொழில் முடங்கியிருப்பதால், உணவுச் சேவைத் தொழிலே அதன் முழு அளவிலிருந்து பாதியாகச் சுருங்கியுள்ளதாக தேசிய உணவக இந்தியக் கழகம் தெரிவித்துள்ளது.
கரோனா பேரிடர் தொடங்குவதற்கு முன்பிருந்ததை விட, இந்திய உணவுத் தொழிலின் அளவு 53 சதவீதமாக அதாவது, ரூ.4.23 லட்சம் கோடியிலிருந்து ரூ.2 லட்சம் கோடியாக சுருங்கிவிட்டதாகவும் என்ஆர்ஏஐ வெளியிட்ட இந்திய உணவுத் தொழில் - 2021 மீது கரோனா பாதிப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையி, நகரங்களின் அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால், தில்லி மற்றும் மும்பையில் உணவுச் சேவைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது, அதே வேளையில், பெங்களூரு மற்றும் கேரளத்தில் பல உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. அதில் பிரபலமான உணவகங்கள் கூட விதிவிலக்கல்ல என்கிறது புள்ளிவிவரங்கள்.
நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக, மிக முக்கிய 2 நகரங்களிலும் உணவுத் தொழிலானது மிக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனாவால் உலகளவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தொழில்களில் உணவுத் தொழில்தான் முக்கியமானது. அது இந்தியாவில் மட்டும் விதிவிலக்கல்ல. அதிலும் கூட, நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது சிறிய உணவகங்கள் மற்றும் அமைப்புச் சாரா உணவுத்துறைதான்.
இதையும் படிக்கலாமே.. நகைக்கடன் தள்ளுபடி: இந்த வாரத்தில் அரசாணை வெளியீடு
போதிய சுகாதாரமின்மை, பாதுகாப்பு காரணங்களால், சிறிய உணவகங்களில் உணவருந்துவோரின் எண்ணிக்கைக் குறைந்து, மிக மோசமான பாதிப்பை எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் துறையாக இருக்கும் உணவுத் துறை, விரைவில் மீண்டு எழும் என்று நம்புவதாகவும், அங்குதான் 73 லட்சம் மக்கள் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்னதான் நடந்தது?
- உணவுத் தொழில் 53 சதவீதமாக அதாவது ஆண்டு வர்த்தகம் ரூ.4.2 லட்சம் கோடியிலிருந்து (2020 நிதியாண்டு) ரூ.2 லட்சம் கோடியாக (2021 நிதியாண்டில்) சரிந்தது.
- நாட்டில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக 25 சதவீதக உணவகங்கள் நிரந்தரமாக மூடப்பட்டன.
- நாடு முழுவதும் உணவகங்களில் பணியாற்றி வந்த 24 லட்சம் பேர் வேலையிழந்தனர்.
- பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் காரணமாக, உணவகங்களில் உணவு சமைக்க அதிகம் செலவாவதும், அதனால் உணவு பொருள்களின் விலையும் உயர்ந்து, சாதாரண, ஏழை, எளிய மக்களுக்கு உணவகங்களுக்கு வருவது சிரமமாக மாகிறது.