ஆங்கிலேயர் கால சுரங்கப்பாதை கண்டெடுப்பு: சுதந்திரப் போராட்ட வீரர்களை அழைத்தச் சென்ற ரகசிய வழி
சட்டப்பேரவை வளாகத்திலிருந்து செங்கோட்டைக்குச் செல்லும் சுரங்கப்பாதை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தில்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் சுரங்கப்பாதை வடிவிலான கட்டடம் நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு தில்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கூறுகையில், "கண்டெடுக்கப்பட்டுள்ள சுரங்கைப்பாதை செங்கோட்டையை இணைக்கிறது.
சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து செல்வதற்காக ஆங்கிலேயர்கள் இதனை பயன்படுத்தியுள்ளனர். நான் சட்டப்பேரவை உறுப்பினராக 1993ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சட்டப்பேரவையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் சுரங்கப்பாதை உள்ளதாக சிலர் தெரிவித்தனர். எனவே, அதன் வரலாற்றை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன்.
ஆனால், தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை. சுரங்கப்பாதையில் இருக்கும் ஒரு முனையை கண்டுபிடித்துள்ளோம். ஆனால், அதற்கு மேல் தோண்டவில்லை. ஏனெனில், மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சுரங்கப்பாதையின் பாதை அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1912ஆம் ஆண்டு, கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டபோது இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் சட்டப்பேரவை வளாகம்தான் அப்போது மத்திய சட்டப்பேரவை வளாகமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர், நீதிமன்றமாக பயன்படுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர இப்பாதை பயன்படுத்தப்பட்டது.
இதையும் படிக்க | கர்நாடகம்: 86 மாணவிகளுக்கு கரோனா தொற்று
சட்டப்பேரவை வளாகத்தில் தூக்கு மேடை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதனை இப்போது வரை திறக்கவில்லை. 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கு ஆய்வு செய்ய முடிவு எடுத்துள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதை நினைவு சின்னமாக மாற்ற திட்டமிட்டுவருகிறோம்" என்றார்.