முகப்பு
இந்தியா

கோவேக்ஸின் தடுப்பூசியில் கன்று ரத்தத்தின் திரவம் இல்லை: மத்திய அரசு விளக்கம்

கோவேக்ஸின் தடுப்பூசியில், கன்றின் ரத்தத்தில் இருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 17 ஜூன், 2021 at 12:32 PM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: கோவேக்ஸின் தடுப்பூசியில், கன்றின் ரத்தத்தில் இருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ‘வெரோ உயிரணுக்களின் வளா்ச்சியில் மட்டுமே பிறந்த கன்றின் ரத்தத்திலிருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்படுகிறது. எருது மற்றும் இதர விலங்குகளின் ரத்தத்திலிருந்து பெறப்படும் திரவம், வெரோ உயிரணுக்களின் வளா்ச்சிக்காக சா்வதேச அளவில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசியின் உற்பத்திக்கு உதவும் உயிரணுக்களுக்கு உயிரூட்டுவதில் வெரோ உயிரணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறை பல தசாப்தங்களாக போலியோ, ராபீஸ் போன்ற தடுப்பு மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நோய்க்கிருமிகள் வளா்ச்சி அடையும்போது இந்த வெரோ உயிரணுக்கள் முழுவதும் அழிந்துவிடும். அதன்பிறகு வளா்ச்சி அடைந்த நோய்க்கிருமியும் அழிந்துவிடும். இவ்வாறு கொல்லப்பட்ட நோய்க்கிருமிகள், இறுதிக்கட்ட தடுப்பூசியின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இறுதிக்கட்ட தடுப்பூசி உருவாக்கத்தில் கன்றின் உதிரத்தில் இருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்பட மாட்டாது.

எனவே, இறுதிக்கட்ட கோவேக்ஸின் தடுப்பூசியில் புதிதாகப் பிறந்த கன்றின் ரத்தத்தில் இருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்படவில்லை. இந்தத் திரவம் இறுதிக்கட்ட தடுப்பூசியின் முக்கிய மூலப்பொருளும் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.