முகப்பு
இந்தியா

திருப்பங்களுடன் நகரும் பஞ்சாப் அரசியல்; பிரதமர் மோடியை சந்தித்த பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதலமைச்சராக சன்னி பொறுப்பு ஏற்று கொண்ட பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேசியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி பிரதமர் மோடியை இன்று சந்தித்துள்ளார். நெல் கொள்முதல் செய்வதை ஒத்திவைத்துள்ள மத்திய அரசின் முடிவை திரும்ப பெற்றுக்கொள்ள அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் முதலமைச்சராக சன்னி பொறுப்பு ஏற்று கொண்ட பிறகு பிரதமர் மோடியுடன் நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும். 

முதலமைச்சராக பொறுப்பு வகித்த அமரீந்தர் சிங் பதவி விலகியதை தொடர்ந்து, அப்பொறுப்பு சன்னிக்கு வழங்கப்பட்டது. தில்லிக்கு சென்றுள்ள சன்னி, காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது, பஞ்சாப் அரசில் எந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் ஆலோசனை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. சித்துவை சமாதானப்படுத்தும் வகையில் இக்குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமரீ்ந்தர் சிங் ராஜிநாமாவில் தொடங்கிய பஞ்சாப் அரசியலின் அதிரடி திருப்பங்கள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகியது வரை நீண்டது. இதற்கு மத்தியில், சன்னியின் தில்லி பயணம் அமைந்துள்ளது.

பஞ்சாப், ஹரியாணாவில் சமீபத்தில் கனமழை பெய்ததால் அக்டோபர் 11ஆம் தேதி வரை, நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. நெல் கொள்முதலை மத்திய அரசின் இந்திய உணவு கழகத்துடன் இணைந்து மாநில அரசின் அமைப்புகள் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, மத்திய அரசின் முடிவை திரும்ப பெற்றுக்கொள்ள சன்னி மோடியை வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.