பஞ்சாப் மாநிலம், லூதியாணா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குண்டு வெடித்த சம்பவம் குறித்து தகவல் தந்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
வழக்கில் துப்பு துலங்கும் வகையில் தகவல் அளிக்கும் நபர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், அவர்களது தனிப்பட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் லூதியாணாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 5 போ் காயமடைந்தனா்.
லூதியானா குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையில் வெடிகுண்டு வைத்தபோது அது வெடித்ததில் உயிரிழந்த ககன்தீப் சிங் சிங், பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களுடன் தொடா்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகவும், அதன் தொடா்ச்சியாக வெடிமருந்துகள் பெற ஜெர்மனியில் உள்ள முல்டானி என்பவர் உதவி செய்ததாகவும் தெரிய வந்தது.
வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.